வாஷிங்டன் டி.சி.,
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்ற சூழல் எழுந்த நிலையில், சமீபத்தில் இரு தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அரசில் சிறப்பு தூதர்களாக உள்ள ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரேட் குஷ்னர் இருவரும் இதில் கலந்து கொண்டனர். ஈரான் சார்பில் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அரக்சி பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஏறக்குறைய 14 மணி நேரம் நீடித்த இந்த ஆலோசனையில், ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த சூழலில், அமெரிக்க சிறப்பு தூதர்கள் ஸ்டீவ் விட்காப், ஜாரேட் குஷ்னர் ஆகிய இருவரையும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இன்று சந்தித்து பேசினார். இதில், மண்டல விவகாரங்கள் பற்றிய ஆலோசனை நடந்தது. இதேபோன்று, ஈரானுடன் நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் பற்றி நெதன்யாகுவிடம் அவர்கள் விளக்கி கூறினர்.
கடந்த காலங்களில், டிரம்ப் மற்றும் நெதன்யாகு இருவரும் காசா அமைதி திட்டம் மற்றும் இருதரப்பு உறவுகளை விரிவுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். இதுபற்றியும் இன்றைய சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் அரசில் சிறப்பு தூதர்களாக செயல்பட்டு வரும் ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகிய இருவரும் பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம், ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினர்.
உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், டிரம்ப் அரசின் சார்பில் புதினை சந்தித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், கிரீன்லாந்து தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை குழுவிலும் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவருடனும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் சந்திப்பு இன்று நடந்துள்ளது.