டெல் அவிவ்,
மத்திய கிழக்கில் தற்போது பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. ஒரு பக்கம் இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல்களைத் தொடரும் சூழலில், இப்போது லெபனான் நாட்டிலும் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவும் ஈரானும் அணு ஆயுதங்கள் தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இருப்பினும், இரு தரப்பிற்கும் இடையே கடைசி வரை உடன்பாடு எட்டப்படவே இல்லை. இதனால் அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை ஈரானைச் சுற்றிலும் குவித்து வந்தது. எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என்றே கணிக்கப்பட்டது.
அதன்படியே கடந்த சனிக்கிழமை ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா- இஸ்ரேல் ஆரம்பித்தது. ஈரானின் முக்கியமான பகுதிகளைக் குறிவைத்து இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தின. இதில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டுள்ளார். இருப்பினும், ஈரானும் இதில் கடுமையான பதிலடியைக் கொடுத்து வருகிறது. அங்குள்ள அமெரிக்க முகாம்களைக் குறிவைத்து ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் அங்கு மோசமான சூழல் நிலவுகிறது.
காமேனி மரணத்திற்குப் பதிலடியாக இஸ்ரேலைக் குறிவைத்து ராக்கெட் மற்றும் ட்ரோன்களை ஹிஸ்புல்லா அமைப்பு ஏவிய நிலையில், அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் தொடர்ச்சியான இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லெபனான் நாட்டின் மீதும் இஸ்ரேலிய படைகள் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ரூட்டில் பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டதாகச் சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் இடங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருதாக கூறப்படுகிறது. இதனால் ஈரானைத் தாண்டியும் மத்திய கிழக்கு முழுக்கவே ஒரு போர் பதற்றம் உருவாகியுள்ளது.
லெபனான் மீது இஸ்ரேலிய படைகள் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதை அறிந்த மக்கள் அச்சத்தில் இடம்பெயர்ந்து வருகின்றனர்.