காசா,
இஸ்ரேல் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லையை சுற்றிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கடந்த வாரம் பேரணியாக சென்றனர். அவர்கள் கலைந்து செல்வதற்காக இஸ்ரேல் ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசியுள்ளனர். தொடர்ந்து துப்பாக்கி சூடும் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 17 பாலஸ்தீனியர்கள் பலியாகினர். 1,400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் 757க்கும் கூடுதலானோர் துப்பாக்கி சூட்டிலும் மற்றவர்கள் ரப்பர் புல்லட்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் ஆகியவற்றால் காயமடைந்து உள்ளனர்.
வீரர்கள் மீது கற்கள் மற்றும் எரிகுண்டுகள் அல்லது டயர்களை எறிந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது என இஸ்ரேல் ராணுவம் கூறியது. இஸ்ரேலுக்குள் ஊடுருவும் முயற்சிகள் நடந்தன. எல்லை பகுதியில் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதலுக்கான முயற்சியும் நடந்தது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், காசா எல்லையில் இஸ்ரேல் படை நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனியர் ஒருவர் பலியாகி உள்ளார். இதேபோன்று கடந்த வார தாக்குதலில் காயமடைந்து இருந்த நபரொருவர் உயிரிழந்து விட்டார். இதனால் போராட்டங்கள் மற்றும் வன்முறைக்கு பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.