இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அரபு நகரமான உம் அல் பஹ்ம் நகரில் உள்ள ஒரு வனப்பகுதிக்கு அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வனப்பகுதிக்குள் இருந்து மண்வெட்டி மற்றும் மெட்டல் டிடெக்டருடன் வாலிபர்கள் 2 பேர் வெளியே வந்ததை போலீசார் பார்த்தனர். பின்னர் அந்த வாலிபர்கள் இருவரும் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் வேகமாக சென்று அவர்களின் காரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்த தொன்மை வாய்ந்த 2 நாணயங்களை போலீசார் கைப்பற்றினர். அதன் பின்னர் போலீசார் அந்த 2 நாணயங்களையும் தொல்பொருள் ஆணையத்திடம் ஒப்படைத்தனர். தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்ததில் அந்த 2 நாணயங்களில் ஒன்று சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரியவந்தது.
அந்த நாணயத்தின் ஒருபுறம் கிரேக்கக் கடவுளான ஜீயசின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதாகவும், மறுபுறம் மின்னல்கள் வெட்டும்போது கழுகு இறக்கைகளை மூடி நிற்பது போல அலங்கரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த நாணயத்தில் டோலமிக் வம்சத்தை சேர்ந்த எகிப்து மன்னரின் பெயர் கிரேக்க மொழியில் பொறிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த ஆய்வாளர்கள் அந்த நாணயம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறினர்.