புதுடெல்லி,
டெல்லியில் இருந்து ஹாங்காங் புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் விமானப்பணிப்பெண்ணாக பணியாற்றியவரிடம், இருந்து 4,80,200 டாலர் (ரூ.3.21 கோடி) தொகையை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விமானப்பணிப்பெண்ணை பிடித்து நடத்திய விசாரணையில், டெல்லியில் உள்ள டிராவல் ஏஜென்சி உரிமையாளர் மூலமாக அமெரிக்க டாலரை ஹாங்காங்கில் உள்ள சிலருக்கு வழங்கிவிட்டு அதற்கு மாற்றாக, தங்க கட்டிகளை வாங்கி வந்து கொடுத்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.
கருப்பு பணத்தை மாற்றி தங்கமாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள கும்பலுடன் விமானப்பணிப்பெண்ணுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்த அதிகாரிகள், டிராவல் நிறுவன உரிமையாளர்தான் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்து விசாரித்தால் முழு விவரமும் தெரிய வரும் என்றனர். மேலும், டிராவல் நிறுவன உரிமையாளரை கைது செய்து விசாரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இது பற்றி மேலும் கூறிய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், தொழிலதிபர்களிடம் இருந்து பணத்தை சேகரித்து, விமான சிப்பந்தி மூலமாக ஹாங்காங் கொண்டு சென்று அங்கிருந்து தங்க கட்டிகளை பெற்று வந்த மோசடி சம்பவம் தெரியவந்துள்ளது. விமான பணிப்பெண்ணுக்கு இதற்காக ஒரு சதவீத கமிஷன் தொகையும் வழங்கி வந்துள்ளனர். 10 க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், மேலும், சில விமான சிப்பந்திகளுக்கு தொடர்பு இருக்க கூடும் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். அவர்களை கண்காணித்து வருகிறோம் என்றனர் அதிகாரிகள்.
இந்த சம்பவம் பற்றி ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கூறும் போது, வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணையின் போது பெரிய அளவிலான வெளிநாட்டு பணம் விமான ஊழியரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. ஊழியரை காவலில் எடுத்துள்ளனர். சட்ட முகமைகள் அளிக்கும் விவரங்கள் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கையை விமான நிறுவனம் எடுக்கும் என்று தெரிவித்தது. #JetAirways | #arrest