வாஷிங்டன்,
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படும் சூழலில் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பல நாடுகளும் ஈடுபட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது.
இதற்காக பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. நல்ல உடல்நிலையுடன் உள்ள தன்னார்வலர்கள் பலர் இந்த பரிசோதனைகளுக்காக தங்களை ஆட்படுத்தி கொண்டுள்ளனர். எனினும், பலகட்ட பரிசோதனைகளில் குறிப்பிடத்தக்க வகையிலான முன்னேற்றம் எதுவும் எட்டப்படாத சூழ்நிலையில் முயற்சியானது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நடத்திய ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்தின் செயல் அதிகாரி கூறும்பொழுது, எங்களுடைய நிறுவனம் இளைஞர்களிடம் கொரோனா தடுப்பு மருந்துக்கான பரிசோதனைகளை நடத்த திட்டமிட்டு உள்ளது.
இதற்காக 12 முதல் 18 வயது உடைய டீன் ஏஜ் வயதினரை தேர்வு செய்து அவர்களிடம் கூடிய விரைவில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளை நடத்தவுள்ளோம் என்று தெரிவித்து உள்ளார்.