டாக்கா,
வங்காளதேசத்தில் பிரதமராக இருந்தவர் கலீதா ஜியா (வயது 73). இவர், அநாதைகள் இல்ல ஒதுக்கீட்டுக்கான பணத்தில் ஊழல் செய்து விட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது. அரசியல் நோக்கம் கொண்டது என இதற்கு ஜியா மறுப்பு கூறினார்.
எனினும், கடந்த பிப்ரவரியில் ஊழல் வழக்கில் குற்றவாளியாக ஜியா அறிவிக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு 5 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசாருக்கும், அவருடைய ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
கடந்த மே மாதம் ஊழல் வழக்கொன்றில் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் வன்முறை மற்றும் பிற ஊழல் வழக்குகளுக்காக அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், தனது கை மற்றும் கால் ஒன்றில் உணர்விழந்து வருகிறேன். அதனால் மருத்துவ சிகிச்சை வேண்டும் என நீதிமன்றத்திற்கு மனு செய்துள்ளார்.
அவர் பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலை கழகத்தில் இன்று மதியம் பலத்த பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்படி 5 பேர் கொண்ட மருத்துவ வாரியம் அமைக்கப்பட்டு ஜியாவின் உடல்நிலை பரிசோதிக்கப்படுகிறது.
வங்காளதேச தேசியவாத கட்சியின் தலைவரான ஜியாவை காண அவரது தொண்டர்கள் மருத்துவமனை முன் குவிந்துள்ளனர்.