இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்த கொடூர வெடிகுண்டு தாக்குதலில் 22 பேர் பலியானார்கள். 120 பேர் படுகாயம் அடைந்தனர்.மான்செஸ்டரில் நடந்த இந்த தாக்குதலுக்கு உலகளவில் ஏராளமானோர் டுவிட்டரில் தங்களது இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, பிரபல அமெரிக்க மாடல் அழகி கிம் கர்தாஷியன் பதிவிட்ட இரங்கல் டுவீட் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில் அவர், மான்செஸ்டர் தாக்குதல் மனதை உருக்குகிறது. அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன் என வருத்தமான டுவீட்டை பகிர்ந்தார்.
மேலும், உற்சாகமாக இருக்க வேண்டிய இடத்தில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டதே என கூறி, உற்சாகமாக சிரித்துக் கொண்டிருக்கும் தன்னுடைய புகைப்படத்தையும் பகிர்ந்ததே சர்ச்சை வெடிக்க காரணமானது.
கிம் கர்தாஷியனின் இத்தகைய செயலுக்கு டுவிட்டர் பயனாளிகள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து, கிம் அந்த புகைப்படத்தை உடனடியாக தனது பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்.
தற்கொலைப்படைத் தாக்குதல் மூலம் மான்செஸ்டரில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.