உலக செய்திகள்

குவைத் மீது ஈரான் தாக்குதல்? - மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது.

குவைத் சிட்டி,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வந்தது.

இந்த போரால் மத்திய கிழக்கில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. அதேவேளை, 2 வாரங்கள் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்காவும், ஈரானும் சம்மதம் தெரிவித்துள்ளன. இதையடுத்து இருநாடுகள் இடையே நாளை பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனால், போர் பதற்றம் தணியும் என எதிர்பாக்கப்பட்டது.

இந்நிலையில், வளைகுடா நாடான குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஈரானும் அதன் ஆதரவு ஆயுதக்குழுக்களும் தங்கள் நாட்டின் மீது டிரோன் தாக்குதல் நடத்தியதாக குவைத் குற்றஞ்சாட்டியுள்ளது. அதேபோல், தங்கள் நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியாவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

நாட்டின் முக்கிய கச்சா எண்ணெய் விநியோக குழாய் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி குற்றஞ்சாட்டியுள்ளது. ஈரானும் அதன் ஆதரவு ஆயுதக்குழுக்களும் இந்த தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் நிலவி வருகிறது.