லாகூர்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், சவுத்ரி சர்க்கரை ஆலை ஊழல் வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைதாகி லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது தந்தை நவாஸ் ஷெரீப்பை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளதால் தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என லாகூர் உயர் நீதிமன்றத்தில் மரியம் நவாஸ் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணையின் முடிவில் மரியம் நவாஸை ஜாமீனில் விடுதலை செய்த லாகூர் உயர் நீதிமன்றம், அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இந்நிலையில் வெளிநாடுகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டவர்களுக்கான பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டது. இந்த தடையை நீக்குமாறு கோரிக்கை மனு ஒன்றை மரியம் நவாஸ் லாகூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் தான் நீதிமன்ற விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகவும், தனது வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை தன்னை வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் லண்டனில் சிகிச்சை பெற்று வரும் தன் தந்தையை கவனித்துக் கொள்ள தான் அங்கு இருக்க வேண்டியது அவசியம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த லாகூர் உயர்நீதிமன்றம் மரியம் நவாஸ் வெளிநாடு செல்ல அனுமதிப்பது குறித்து இன்னும் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.