உலக செய்திகள்

மலேசிய பிரதமர் மகாதிர் பின் முகம்மதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

மலேசிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மகாதிர் முகம்மதுவை சந்தித்து பேசினார். #PMmodi

ஜகார்த்தா,

பிரதமர் மோடி கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் 5 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் அவர் இந்தோனேசியா சென்றார். நேற்று அவர் அந்நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோவை தலைநகர் ஜகார்த்தாவில் சந்தித்து பேசினார்.

இரு தலைவர்களும் ராணுவம், கடல் சார் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஒத்துழைத்து செயல்படுவது பற்றி விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இது தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின. மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இந்த நிலையில், இந்தோனேசியா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, மலேசியா புறப்பட்டுச்சென்றார். மலேசிய தலைநகர் கோலலம்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, கோலலம்பூரில், மலேசிய பிரதமர் மகாதிர் பின் முகம்மதுவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிகிறது.