உலக செய்திகள்

மாலத்தீவுகளில் அவசரகாலச்சட்டம் நீக்கம் : அதிபர் அறிவிப்பு

கடந்த 45 நாட்களாக நீடித்து வந்த அவசரக்காலச்சட்டத்தினை நீக்குவதாக மாலத்தீவுகளின் அதிபர் அப்துல்லா யாமீன் அறிவித்தார். #MaldivesEmergency #AbdullaYameen

கொழும்பு,

மாலத்தீவில் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் முகமது நஷீத் உள்ளிட்ட ஒன்பது பேரை விடுவிக்குமாறு அரசுக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் உத்தரவிட்டது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க உத்தரவிட்டும், விடுவிக்காத அரசை கண்டித்து எதிர்க்கட்சியினர் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் பாராளுமன்றத்தை ராணுவம் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. மேலும் மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு நாடெங்கும் 45 நாட்கள் அவசரநிலையை பிரகடனப்படுத்தியதால் பெரும் பதற்றம் நிலவியது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு பரிதவித்து வந்தனர். மேலும், அதிபரின் உத்தரவின் படி அவசரச்சட்டத்தின் கீழ், அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அப்துல்லா சயீத், அலி ஹிமீத் உட்பட் நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த 45 நாட்களாக நீடித்து வந்த அவசரகாலச்சட்டத்தினை நீக்கிய மாலத்தீவுகளின் அதிபர் அப்துல்லா யாமீன் இன்றுடன் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என அறிவித்தார்.