அபுதாபி,
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் மாதம் 12-ந்தேதி அடுத்தடுத்து 12 இடங்களில் அதிபயங்கர குண்டுகள் வெடித்தன. இந்த கோர சம்பவத்தில் 257 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த பயங்கர சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் ஆவார். இவர் தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான அபு பக்கர் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யு.ஏ.இ.) கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவர் தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி ஆவார். இவர் பாகிஸ்தானில் ஆயுதம் மற்றும் வெடிப்பொருள் பயிற்சி பெற்றவர். மேலும் மும்பையில் நாசவேலையில் ஈடுபடுவது தொடர்பாக துபாயில் உள்ள தாவூத் இப்ராகிம் வீட்டில் சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்.
தற்போது இவர் வளைகுடா நாடுகளில் இருந்து மும்பைக்கு தங்கம், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கைதான அபு பக்கர் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.