அஸ்டோரியா,
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின் இதுவரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இல்லை. ஜெர்மனி மற்றும் வியட்நாமில் நடந்த பொருளாதார மாநாடுகளில் இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்தது மட்டுமின்றி, தொலைபேசி வாயிலாகவும் பேசி இருக்கின்றனர்.
இதற்கிடையே, இரு வல்லரசுகளின் தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும், ரஷியாவின் கிரம்ளின் மாளிகையும் மேற்கொண்டு வந்தன. இதன் விளைவாக 3-வது நாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான பின்லாந்து நாட்டின் தலைநகரான ஹெல்சின்கி நகரில் ஜூலை 16-ம் தேதி இந்த பேச்சுவார்த்தையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. முதலில் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும், பின்னர் தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இரு தலைவர்களுக்கு இடையே நடைபெற உள்ள இந்த சந்திப்பு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக அமெரிக்கா, 12 ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டிய பிறகு பேச்சுவார்த்தைக்கு பல எதிர்ப்புகள் எழுந்தன.
இதற்கிடையே, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பின்லாந்து தலைநகரான ஹெல்சின்கி நகரை வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.