உலக செய்திகள்

ஜிம்பாப்வே: 50.8 சதவீத வாக்குகளை பெற்ற மனன்கக்வா அதிபராக தேர்வு

ஜிம்பாப்வேயில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 50.8 சதவீத வாக்குகளை பெற்ற மனன்கக்வா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அவரது கட்சி அறிவித்துள்ளது.

ஹராரே,

ஜிம்பாப்வேயில் அதிபராக இருந்த ராபர்ட் முகாபே கடந்த ஆண்டு அகற்றப்பட்ட பிறகு, அங்கு சென்ற 30-ந் தேதி அதிபர் தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. நேரடி தேர்தல் நடந்த 210 இடங்களில் அதிபர் எமர்சன் மனன்கக்வாவின் ஆளும் ஜானு-பி.எப். கட்சி 140 இடங்களில் வெற்றி பெற்றது. நெல்சன் சாமிசா தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி எம்.டி.சி., 58 இடங்களைப் பிடித்து உள்ளது. இந்த நிலையில், 50.8 சதவீத வாக்குகளை பெற்ற மனன்கக்வா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்டு நெல்சன் சாமிசா 44 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஆளுங்கட்சி அடக்குமுறையைக் கையாள்வதாக கூறி எதிர்க்கட்சியினர் நேற்று முன்தினம் தலைநகர் ஹராரேயில் கற்களை வீசிப் போராட்டம் நடத்தினர். அவர்களை கலைப்பதற்கு பாதுகாப்பு படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இந்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் இருந்த நிலையில், ஹராரேயில் இப்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.