உலக செய்திகள்

பாதுகாப்பு அளித்தால்தான் பாகிஸ்தான் வருவேன்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் நிபந்தனை

பாதுகாப்பு அளித்தால்தான் பாகிஸ்தான் வருவேன் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் நிபந்தனை விதித்துள்ளார். #Musharraf

இஸ்லமாபாத்,

வழக்கு விசாரணைகளுக்காக நான் பாகிஸ்தான் வர வேண்டுமென்றால், எனக்கு அரசு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த நாட்டின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் வலியுறுத்தியுள்ளார். ராணுவ தலைமைத் தளபதியாக இருந்து, கடந்த 1999-ஆம் ஆண்டில் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய முஷரப் கடந்த 2007-ஆம் ஆண்டு நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார்

அப்போது, அரசமைப்புச் சட்டத்தை தாற்காலிகமாக முடக்கியதுடன், 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை அவர் சிறையிலடைத்தார்.இந்த விவகாரம் தொடர்பாக, முஷரப் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டு, அவர் மீதான குற்றச்சாட்டு கடந்த 2014-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது.இந்தச் சூழலில், மருத்துவ சிகிச்சைக்காக அரசின் அனுமதியுடன் கடந்த 2016-ஆம் ஆண்டு துபாய் சென்ற அவர், அங்கேயே தங்கிவிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவுக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திடம் முஷரப் அளித்துள்ள மனுவில், வழக்கு விசாரணையை எதிர்கொள்ள பாகிஸ்தான் வர வேண்டுமென்றால், உறுதியான பாதுகாப்பை வழங்குவதாக பாகிஸ்தான் அரசு உறுதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.