நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மேன்ஹேட்டனில் மையபகுதியாக டைம்ஸ் சதுக்கம் அமைந்துள்ளது. மிக பெரிய வர்த்தக பகுதியாகவும், சுற்றுலா தலம் ஆகவும் திகழ்கிறது. ஆண்டுதோறும் 5 கோடி பேர் வருகை தர கூடிய அளவுக்கு அதிக சுற்றுலாவாசிகளை கவர கூடிய பகுதிகளில் ஒன்றாக உள்ளது என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் முதன்முறையாக நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் புனித ரம்ஜான் மாதத்தில் மேற்கொள்ளும் தங்களுடைய விரதத்தினை முடித்து கொண்டு டைம்ஸ் சதுக்கத்தில் தராவீ இறைவணக்கம் செலுத்தியுள்ளனர்.
இந்த இறைவணக்கம் ரம்ஜான் மாதம் தொடங்கி, நிறைவடையும் வரை ஒவ்வொரு நாளும் புனித குரானில் உள்ளவற்றை படிப்பது ஆகும்.
இதனை முன்னிட்டு இறைவணக்க நிறைவில் இரவில் டைம்ஸ் சதுக்க பகுதியில் முஸ்லிம்கள் 1,500 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்களில் ஒருவர் கூறும்போது, இதனை செய்வதனால், எங்களை உருவாக்கிய, கடவுள் அல்லாவுக்கு மிக நெருங்கியவர்களாக ஆகிறோம்.
இஸ்லாம் என்றால் என்ன? என தெரியாத அனைவருக்கும் அதனை பற்றி விளக்கவே நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம். இஸ்லாம் ஓர் அமைதியின் மதம் என கூறினார்.
இதேபோன்று, தராவீ இறைவணக்கத்தில் கலந்து கொண்ட மற்றொரு நபர் கூறும்போது, இஸ்லாம் பற்றிய பல தவறான விசயங்கள் பரவியுள்ளன. அனைத்து கலாசாரங்களிலும், அனைத்து மதங்களிலும், அற்பத்தனம் நிறைந்த மக்கள் ஊடுருவி உள்ளனர். நாங்கள் இங்கே இறைவணக்கம், விரதம், நற்செயல்கள், நன்கொடை அளித்தல் ஆகியவற்றை செய்ய ஊக்கப்படுத்தப்படுகிறோம் என கூறியுள்ளார்.
இஸ்லாமிய நாட்காட்டியின்படி 9வது மாதம் ஆக ரம்ஜான் வருகிறது. இதில், சூரிய உதயம் முதல் சூரியன் மறைவு வரை இஸ்லாமை பின்பற்றுவோர் விரதம் மேற்கொள்கின்றனர்.
அதில், அமைதி மற்றும் வழிகாட்டுதலுக்காக இறைவணக்கம் செலுத்துதல், நன்கொடை அல்லது ஏழைகளுக்கு உணவளித்தல் போன்ற மனிதநேய செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட சமூகத்திற்கு திருப்பி அளித்தல் மற்றும் ஆத்மாக்களை புத்தொளி பெற செய்வதற்காக தங்களது எண்ணங்களை சுயபரிசோதனை செய்து கொள்கின்றனர்.
ரம்ஜானில் மேற்கொள்ளப்படும் இந்த வருடாந்திர கடைப்பிடித்தல் இஸ்லாமின் 5 தூண்களில் ஒன்றாக உள்ளது.