உலக செய்திகள்

எத்தியோப்பியாவில் போயிங் 737 விமானம் விழுந்து விபத்து நேரிட்டதில் 157 பேர் உயிரிழப்பு

எத்தியோப்பியாவில் போயிங் 737 விமானம் விழுந்து விபத்து நேரிட்டதில் 157 பேர் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபியை நோக்கி போயிங் 737 விமானம் சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட 7 நிமிடங்களில் ரேடாரில் இருந்து மறைந்துள்ளது. விமானம் கீழே விழுந்து விபத்து நேரிட்டுள்ளது. விபத்து நேரிட்ட இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எத்தியோப்பிய பிரதமர் அலுவலகமும் விபத்தை உறுதி செய்தது.

விமானத்தில் பயணிகள் 149 பேர் இருந்து உள்ளனர். விமானிகள், பணியாளர்கள் என 8 பேர் இருந்துள்ளனர். விபத்தினால் உயிரிழப்பு நேரிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் விபத்தில் சிக்கிய விமானத்தில் சென்றவர்களில் யாரும் உயிருடன் இல்லை என்று உள்ளூர் மீடியா தகவல் வெளியிட்டுள்ளது என ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. விமானத்தில் 33 நாடுகளை சேர்ந்தவர்கள் பயணம் செய்து உள்ளனர் என தெரியவந்துள்ளது. விமானம் புறப்பட்டதும் செங்குத்தாக, வேகமாக சென்றபோது நிலையற்றதன்மை காணப்பட்டதாக தரவுகள் தெரிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது இரங்கல் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT