இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து பிரதமராக இருந்து வருபவர் இம்ரான் கான். முன்னாள் கிரிக்கெட் வீரரான கான், நாட்டில் ஊழலை ஒழித்து ஒரு புதிய பாகிஸ்தானை உருவாக்குவேன் என தேர்தலின்போது உறுதி கூறினார். அந்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு, ஊரடங்கு ஆகியவற்றால் தொழில்கள் முடங்கின. மக்கள் பெரிதும் இன்னல்களுக்கு ஆளாகினர். இந்த நிலையில், பாகிஸ்தானில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்தது. இதனால் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கு பொறுப்பேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்து விலக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் கோஷம் எழுப்பினர். கானை பதவி நீக்கம் செய்ய கோருவது என எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்தனர். ஆனால், எதிர்க்கட்சி தலைவர்கள் செய்த ஊழலை கண்டுகொள்ளாமல் இருக்க நான் தயாராக இல்லை என்பதற்காக என்னை நீக்க அவர்கள் முயற்சிக்கின்றனர் என கான் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
எனினும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவற்றின் 100 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றில் கையெழுத்திட்டனர். இதனை அந்நாட்டு தேசிய சட்டமன்ற செயலகத்தில் இன்று சமர்ப்பித்து உள்ளனர்.
விதிகளின்படி, 3 முதல் 7 நாட்கள் வரை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்துவதற்கு சபாநாயகரை வலியுறுத்த குறைந்தது 68 எம்.பி.க்களின் கையெழுத்து தேவை. இதேபோன்று, 342 உறுப்பினர்களை கொண்ட அவையில், பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவையை நீக்க 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக உள்ளது. இதனால், கானின் பதவி தப்புமா? என்பது கேள்வியாக உள்ளது.