நார்வே,
பல்வேறு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசை வென்றவர்கள் ஆகியோர், 2021 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெறுவதற்கு தகுதி உடையவர் என தாங்கள் நினைக்கும் பெயர்களை நார்வே நோபல் கமிட்டியிடம் பரிந்துரை செய்துள்ளனர்.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கிரேட்டா தன்பெர்க், ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக இந்த பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர உலக பொது சுகாதார அமைப்பு, இனவெறிக்கு எதிரான இயக்கமாக உருவாகிய Black Lives Matter ஆகிய பெயர்களும் நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை நார்வே நோபல் கமிட்டி பரிசீலனை செய்து வரும் அக்டோபரில் நோபல் பரிசு பெறுபவரின் பெயரை அறிவிக்கும். கடந்த ஆண்டு ஐ.நா.வின் உலக உணவு திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.