உலக செய்திகள்

கிம் ஜாங் உன் -ஐ கொலை செய்ய சிஐஏ சதி செய்வதாக வடகொரியா பரபரப்பு குற்றச்சாட்டு

கிம் ஜாங் உன் -ஐக் கொலை செய்ய தென் கொரியாவுடன் இணைந்து சிஐஏ சதி செய்வதாக வடகொரியா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

போயாங்யான்,

தென் கொரியா மற்றும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கிம் ஜாங் உன்னை ரசாயன பொருட்களை பயன்படுத்தி கொலை செய்ய சதித்திட்டம் வகுத்துள்ளதாக வடகொரியா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

வடகொரியாவின் ஏவுகணை திட்டங்கள் மற்றும் அணு ஆயுத சோதனைகளால் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே பதட்டம் அதிகரித்துள்ள நிலையில் தங்கள் தலைவரை கொல்ல சதித்திட்டம் நடப்பதாக வடகொரியா அதிகாரிகள் கூறியுள்ளனர். தென் கொரியாவிலும் ஒரு சில தினங்களில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேற்கண்ட குற்றச்சாட்டு கவனம் பெற்றுள்ளது.

வடகொரிய தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், சி.ஐ.ஏ மற்றும் தென் கொரிய உளவு அமைப்பின் ஆதரவு பெற்ற "பயங்கரவாதக் குழு", உயிரியல் இரசாயனப் பொருள் கொண்டு தாக்குதல் நடத்துவதற்காக வட கொரியாவுக்குள் நுழைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகளைக் கண்டறிந்து, அழிக்கப்போவதாக வடகொரியா எச்சரித்துள்ளது.கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்த சர்ச்சையும் புதிதாக கிளம்பியிருக்கிறது. கிம் ஜோங்-உன் பெயரை வெளிப்படையாக குறிப்பிடவில்லை என்றாலும் கட்சியின் உயர் தலைவர் என்று குறிப்பிடப்பிட்டுள்ளது.

ஆனால், இந்த விவகாரம் குறித்து கருத்து கூற சிஐஏ மறுத்துவிட்டது. கடந்த காலங்களில் இது போன்ற குற்றச்சாட்டுக்களை வடகொரியா முன்வைத்துள்ளது. ஆனால், இத்தகைய குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்பட்டதில்லை.

SCROLL FOR NEXT