உலக செய்திகள்

ஓமனில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிப்பு

கல்வி நிலையங்களில் 6 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என ஓமன் சுப்ரீம் கமிட்டி அறிவித்துள்ளது.

மஸ்கட்,

ஓமன் நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஓமன் நாட்டிற்கு வருபவர்களில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமில்லை, ஆனால் வாகனங்கள், தியேட்டர், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மூடப்பட்ட பகுதிகளில் முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஓமன் நாட்டில் உள்ள ஓட்டல்களில் விருந்தினர்களை 100 சதவீதம் தங்க வைத்துக் கொள்ளலாம். கண்காட்சி உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் 70 சதவீதம் பேர் பார்வையிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளில் சுகாதார விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து கல்வி நிலையங்களிலும் வரும் 6 ஆம் தேதி முதல் 100 சதவீத மாணவர்களுடன் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என ஓமன் சுப்ரீம் கமிட்டி அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT