காத்மாண்டு,
கொரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தென்ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி வருகிறது. புதிதாக உருவெடுத்துள்ள இந்த ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அனைத்து நாடுகளிலும் வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஒமைக்ரான் பரவல் அச்சம் காரணமாக தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், போத்ஸ்வானா, ஜிம்பாப்வே, நமீபியா, மொசாம்பிக், லெசோதோ, எஸ்வாடினி மற்றும் மலாவி ஆகிய 9 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் நேபாளத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர தேவைகளுக்காக உயர் அதிகாரிகள் மட்டுமே தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களும் குறிப்பிட்ட காலத்திற்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் நேபாள அரசு கூறியுள்ளது.