உலக செய்திகள்

துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழப்பு

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி மாயமான இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின.இந்த நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்தம் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி மாயமான இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கடந்த 6-ந் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்தியர் விஜய்குமார் மலாட்யா என்ற தங்கி இருந்த ஓட்டல் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகி இருந்தது. அங்கு கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் விஜய்குமார் என்ன ஆனார்? அவரது கதி என்ன? என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் மாயமான விஜயகுமார் ஹோட்டலின் இடிபாடுகளில் சடலமாக மீட்கப்பட்டதாக துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான தகவல் அவரது குடும்பத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.