நியூயார்க்,
அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்புக்கு நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் 58 மாடிகள் கொண்ட பிரமாண்ட கட்டிடம் உள்ளது. இதில் மேற்பரப்பில் உள்ள 3 அடுக்குகளை தனது வீடாக மாற்றி வசித்து வருகிறார். அதிபர் பொறுப்பேற்ற டிரம்ப் பெரும்பாலும் வாஷிங்டன் நகரில் வசித்து வருகிறார்.இந்நிலையில் அடுக்கு மாடியின் 50 வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சற்று நேரத்தில் மளமளவென பரவிய இத்தீவிபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 4 தீயணைப்பு வீரர்கள் சிறு காயங்கள் அடைந்துள்ளனர்.
இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்துள்ளனர். இவ்விபத்து குறித்து தீயணைப்பு அதிகாரி டேனியல் நிக்ரோ கூறுகையில், இது மிகவும் கடுமையான நிகழ்வு. நீங்கள் கற்பனை செய்து பாருங்கள் அவ்வளவு பெரிய அடுக்கு மாடி கட்டிடத்தின் 50வது தளத்தில் ஏற்பட்டுள்ள தீ எவ்வளவு மோசமான ஒன்றாக இருக்கும். மேலும் தீயானது மற்ற தளங்களிலும் பரவிக் கொண்டிருந்தது. இருப்பினும் 200 தீயணைப்பு வீரர்கள் ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களின் உதவியோடு தீயை அணைத்துள்ளனர் எனக் கூறினார். இந்நிலையில் இறந்த நபர் 67 வயதுடையவர், தீ விபத்தில் படுகாயமடைந்து சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் டிரம்ப் டவரில் ஏற்பட்ட தீயை போராடி விரைவில் அணைத்த தீயணைப்பு படை வீரர்களுக்கு டிரம்ப் டுவிட்டரில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வாஷிங்டன்னில் இருந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.