உலக செய்திகள்

இந்தியாவுடன் போர் என்பதற்கு இடமில்லை பாகிஸ்தான் ராணுவம் சொல்கிறது

இந்தியாவுடன் போர் என்பதற்கு இடமில்லை என பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. #PakArmy #India

இஸ்லாமாபாத்,

ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடி தாக்குதலை தொடர்ந்து வருகிறது. எல்லையில் அமைதியின்மை நேரிட்ட நிலையில் கடந்த வாரம் இருநாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைவர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தை நடைபெற்ற போது போர் நிறுத்தத்தை கொண்டுவருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் அதற்கு மதிப்பளிக்காது எல்லையில் அத்துமீறிய தாக்குதலை நடத்தி வருகிறது, இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவம், இந்தியாவுடன் போர் என்பதற்கு இடமில்லை. பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது என்பதற்காக பலவீனமாக உள்ளது என்று தவறாக நினைக்க வேண்டும் எனவும் எச்சரித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் காபூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய ராணுவம் 2018-ம் ஆண்டில் 1,077 முறை எல்லையில் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. எங்களுடைய விருப்பம் எல்லாம் அமைதிதான் என்பதற்காக பலவீனமானவர்கள் என்று நினைக்க வேண்டாம். இந்திய ராணுவம் கடந்த வாரம் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை மீறிய போதும் நாங்கள் பதிலடியை கொடுக்கவில்லை. இந்திய ராணுவம் பொதுமக்கள் குடியிருப்பை குறிவைத்து தாக்குதல் நடத்திய போதுதான் நாங்கள் தாக்குதலை நடத்தினோம் என கூறியுள்ளார். எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சிறுமியும், மூதாட்டியும் உயிரிழந்து உள்ளனர் எனவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் மதிப்பளிக்க விரும்புகிறது. இந்தியா எதிர்காலத்தில் என்ன வேண்டும் என்பதை உணரவேண்டும், புரிந்துக்கொள்ள வேண்டும். இரு நாடுகளும் அணு ஆயுதம் கொண்டது, போருக்கு இடம் கிடையாது என கூறியுள்ளார் ஆசிப் காபூர்.