இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை பனாமா கேட் ஊழல் வழக்கில் அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் 28ந் தேதி தகுதி நீக்கம் செய்தது. அத்துடன் அவர் மீதும், அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ் மற்றும் மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் மீதும் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ஊழல் வழக்குகள் தாக்கல் செய்து, அவற்றை 6 மாத காலத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள்மீது இஸ்லாமாபாத் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் ஊழல் வழக்குகள் தாக்கலாகி உள்ளன.
இந்த நிலையில், புற்றுநோயினால் அவதிப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த தனது மனைவி குல்சூம் நவாசை பார்ப்பதற்காக கடந்த மாதம் 5ந் தேதி அவர் லண்டன் சென்றார். ஒரு மாதம் நிறைவடைய உள்ள நேரத்தில், அவர் நேற்று பாகிஸ்தான் திரும்பினார். பாகிஸ்தான் திரும்பிய நவாஸ் ஷெரீப்பிடம் தேசிய பொறுப்புடமை கோர்ட் அதிகாரிகள், நேரில் ஆஜர் ஆவதற்கான சம்மனை ஒப்படைத்தனர். இதை பெற்றுக்கொண்ட நவாஸ் ஷெரீப், இன்று ஆஜராவதாக தெரிவித்தார். அதன்படி, இன்று தேசிய பொறுப்புடமை கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் தனது சட்டக்குழுவுடன் ஆஜர் ஆனார். நவாஸ் ஷெரீப்பின் மகள் மர்யம் ஷெரீப் மருமகன் கேப்டன் சப்தாருடன் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.
விசாரணை துவங்கியதும், நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான மூன்று வழக்குகளை இணைத்து ஒரே வழக்காக வேண்டும் என்ற மனுவை தேசிய பொறுப்புடமை கோர்ட் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற கருத்தை நீதிபதி பரிசீலிக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். இருப்பினும், இஸ்லாமாபாத், உயர் நீதிமன்றம் விரிவான உத்தரவை பிறப்பிக்கவில்லை எனவும் அதுவரை வழக்கு விசாரணையை ஒத்திவைக்கவேண்டும் என்று நவாஸ் ஷெரீப் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற தேசிய பொறுப்புடமை கோர்ட், நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான வழக்கை வரும் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. நவாஸ் ஷெரீப் ஆஜர் ஆனதால், கோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.