உலக செய்திகள்

இந்திய தொலைக்காட்சி தொடர்களை ஒளிபரப்ப விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கியது லாகூர் நீதிமன்றம்

பாகிஸ்தானில் இந்திய தொலைக்காட்சி தொடர்களை ஒளிபரப்ப விதிக்கப்பட்டு இருந்த தடையை லாகூர் நீதிமன்றம் நீக்கியது.

லாகூர்,

எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டதையடுத்து கடந்த ஆண்டு இந்திய திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் இந்த தடையை விதித்தது.

பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய திரைப்படங்களை திரையிட விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. தொலைக்காட்சி தொடர்கள் மீதான தடை நீடித்தது. இதனை எதிர்த்து லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் போது, இந்திய தொடர்களை ஒளிபரப்பு செய்வதில் தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்திய தொலைக்காட்சி தொடர்களை ஒளிபரப்ப விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்ட லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதிகள், உலகம் இப்போது உலகளாவிய கிராமமாக மாறிவிட்டது.

எவ்வளவு காலம்தான் இதுபோன்ற காரணமற்ற கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்? இந்திய தொலைக்காட்சி தொடரை ஒளிபரப்புவதற்கு மத்திய அரசு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காதபோது, தடை விதிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றால் அதை மட்டும் தணிக்கை செய்து காட்சிகளை நீக்கிவிட்டு ஒளிபரப்பலாம் என்று உத்தரவிட்டனர்.