உலக செய்திகள்

இலங்கை அதிபருடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசி வாயிலாக பேச்சு

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசி வாயிலாக பேசினார்.

கொழும்பு,

இலங்கையைச் சேர்ந்த பிரியந்தா குமாரா தியாவதனா (வயது 40). பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் மாவட்டத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பொது மேலாளராக பணியாற்றி வந்தார். இவர், தன் அலுவலக சுவர் அருகே அனுமதியின்றி ஒட்டப்பட்ட தெஹ்ரீக் - இ - லபைக் அமைப்பின் மத பிரசார சுவரொட்டியை கிழித்துப் போட்டார்.

இது தெரியவந்ததை அடுத்து, அந்த அமைப்பினர் பிரியந்தாவை அடித்து உதைத்து, உயிரோடு தீ வைத்து எரித்துக் கொன்றனர். இது தொடர்பாக 100 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் பிரியந்தா கொல்லப்பட்டதை கண்டித்து இலங்கை பாராளுமன்றத்தில் அனைத்து கட்சி எம்.பி.,க்கள் ஆதரவுடன் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பாகிஸ்தானில் வசிக்கும் இலங்கை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக பேச்சு நடத்த வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரியந்தா சித்தரவதை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கியுள்ளார்.

113 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பான அனைத்து வீடியோக்களையும் பாதுகாப்பு படையினர் கைப்பற்றி ஆய்வு செய்து வருவதாகவும் இம்ரான் கான் கூறியதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT