உலக செய்திகள்

பாகிஸ்தான்: பாதுகாப்பு படை நடத்திய வேட்டையில் 145 பயங்கரவாதிகள் படுகொலை

குவெட்டா நகரில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய தென்மேற்கு மாகாணத்தின் முதல்-மந்திரி புக்தி இன்று தெரிவித்து உள்ளார்.

கராச்சி,

பாகிஸ்தானின் மிகப்பெரிய பலூசிஸ்தான் மாகாணத்தில் தாது பொருட்கள் செறிந்து காணப்படுகிறது. ஈரானை ஒட்டி அமைந்த இந்த பகுதியில் பாதுகாப்பு படைகள், வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர்வாசிகள் மீது பல ஆண்டுகளாக அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பிரிவினைவாதிகள் நடத்தும் இந்த தாக்குதலால், குழந்தைகள், பெண்கள் என பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில், பலூச் பிரிவினைவாதிகள் தங்களுக்கு சுயாட்சி வேண்டும் என கோரி வருகின்றனர். இயற்கை வளங்களில் பெரியதொரு பங்கு வேண்டும் என்றும் கேட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், படையினர், பொதுமக்கள் மற்றும் கட்டிடங்களை இலக்காக கொண்டு பிரிவினைவாதிகள் நடத்திய தாக்குதலில் பொது மக்களில் 18 பேர் உள்பட 33 பேர் பலியாகி உள்ளனர்.

இதனை தொடர்ந்து, பிரிவினைவாதிகளை கண்டறியும் பணி நடந்தது. இதற்காக நடந்த தேடுதல் வேட்டையில் கடந்த 40 மணிநேரத்தில், 145 பயங்கரவாதிகள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதனை குவெட்டா நகரில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய தென்மேற்கு மாகாணத்தின் முதல்-மந்திரி புக்தி இன்று தெரிவித்து உள்ளார்.

குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர் என்றும் அவர் கூறினார். எனினும், வீரர்கள் தரப்பிலும் 17 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்தே தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.