உலக செய்திகள்

பாகிஸ்தான் அரசு நடவடிக்கைக்கு எதிராக வழக்கு ஹபீஸ் சயீத் அறிவிப்பு

பாகிஸ்தான் நடவடிக்கைக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக ஹபீஸ் சயீத் அறிவித்துள்ளார்.

லாகூர்,

அமெரிக்காவின் தொடர் நிர்ப்பந்தம் காரணமாக மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பயங்கரவாதி என பாகிஸ்தான் அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து அவரது சொத்துக்களை கைப்பற்றும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக உள்ளது.

அவரது ஜமாத் உத் தவா, பாலாஹ் இ இன்சானியத் பவுண்டேசன் ஆகியவற்றுக்கு சொந்தமான ஒரு மதப்பள்ளிக்கூடத்தையும், 4 ஆஸ்பத்திரிகளையும் ராவல்பிண்டி மாவட்ட நிர்வாகம் தன் பொறுப்பில் எடுத்துவிட்டது. இது ஹபீஸ் சயீத்துக்கு பேரிடியாக அமைந்து உள்ளது.

இது தொடர்பாக அவர் தனது ஆதரவாளர்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இது நமக்கு ஒரு கடினமான நேரம். ஆனால் நமது தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். நமது ஆட்சியாளர்கள் ஒரு மன்னனைப்போல விசுவாசத்துடன் செயல்பட்டு வருகின்றனர். காஷ்மீர் பற்றிய ஐ.நா. சபையின் தீர்மானங்களை அமல்படுத்துவது பற்றி இந்தியா ஒருபோதும் கவலைப்படவில்லை. ஆனால் தேசப்பற்று கொண்ட ஜமாத் உத் தவா, பாலாஹ் இ இன்சானியத் பவுண்டேசன் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நமது ஆட்சியாளர்கள், ஜனாதிபதியை அவசர சட்டம் நிறைவேற்ற வைத்து உள்ளனர். அமெரிக்காவையும், இந்தியாவையும் மகிழ்விப்பதற்காக பாகிஸ்தான் அரசு நமக்கு எதிராக உச்சக்கட்ட நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறது.

இந்த சட்ட விரோத நடவடிக்கைக்கு எதிராக நாம் கோர்ட்டில் வழக்கு தொடர்வோம்.

இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.