இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் இம்ரான்கானின் ஆட்சி கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் பிரதமராகி உள்ளார்.
அவரது தலைமையிலான அரசில் இடம்பெற உள்ள புதிய மந்திரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். ஷபாஸ் ஷெரீப்பின் பி.எம்.எல்-என் கட்சி மற்றும் பல்வேறு கூட்டணி கட்சிகளில் இருந்து மந்திரிகள் தேர்வாகி இருக்கிறார்கள். இவர்கள் நேற்று பதவியேற்க இருந்தனர்.
ஆனால் புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க அதிபர் ஆரிப் ஆல்வி மறுத்து விட்டார். இந்த நிகழ்வில் இருந்து அவர் விலகிக்கொண்டதால், புதிய மந்திரிசபை பதவியேற்கும் நிகழ்ச்சி தள்ளிப்போடப்பட்டு உள்ளது.
அவர்கள் இன்று அல்லது நாளை பதவியேற்கக்கூடும் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதிபர் மறுத்து இருப்பதால் செனட் தலைவர் சாதிக் சஞ்சராணி புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என கூறப்படுகிறது.
முன்னதாக பிரதமர் ஷபாஸ் ஷெரீப்புக்கும் செனட் தலைவரே பதவி பிரமாணம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கது.