உலக செய்திகள்

பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

லாகூர்,

பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் கோஹட் நகரில் மாவட்ட போலீஸ் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த தலைமை அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதி உள்ளது.

தற்கொலைப்படை தாக்குதல்

இந்த மசூதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்லாமிய மதத்தினர் மத வழிபாடு செய்துகொண்டிருந்தனர். அப்போது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் அந்த கட்டிடத்தின் மீது மோதி வெடித்தது. பின்னர், அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மசூதி, மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்குள் புகுந்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் 16 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது.

பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

இந்நிலையில், இந்த தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 16 பேர் போலீசார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, தற்கொலைப்படை தாக்குதல் நடந்த போலீஸ் தலைமை அலுவலக கட்டிடத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாகவும் மோதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான இத்ஹத் உல் முஜாஹிதீன் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

SCROLL FOR NEXT