இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் நௌமன் ஹசன், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டார். அந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் புலியை வீட்டுக்குள் வாக்கிங் அழைத்துச் செல்கிறான். புலியின் கழுத்தில் கட்டப்பட்ட சங்கிலியை பிடித்துக்கொண்டு புலியின் பின்னால் அந்த சிறுவன் தைரியமாக செல்கிறான். இது பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்த வீடியோவை பார்த்த சிலர் சிறுவனின் தைரியத்தை பாராட்டி கருத்து பதிவிட்டனர். சிலர், கோபத்துடன் கருத்துகளை தெரிவித்தனர். சிறுவனை இவ்வாறு செய்ய வைத்தது அபத்தமானது என்றும் திட்டியுள்ளனர்.
அந்த சிறுவன் யார் என்பதை யூடியூபர் நௌமன் ஹசன் தெரிவிக்கவில்லை. எனினும், அது ஹசனின் மருமகன் என சில பயனர்கள் குறிப்பிட்டனர்.
இதே சிறுவன் இதற்கு முன்பு ஒரு கார் ஷோரூமுக்குள் மற்றொரு புலியுடன் நடந்து செல்லும் சிறு வீடியோ கிளிப்பை ஹசன் வெளியிட்டிருந்தார்.
ஏராளமான விலங்குகளை பராமரித்து செல்லப் பிராணிகளாக வளர்த்து வரும் ஹசன், அந்த விலங்குகளுடன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து வெளியிடுகிறார். கடந்த ஆண்டு லாகூர் சபாரி உயிரியல் பூங்காவில் இருந்து ஏலத்தில் வாங்கிய புலிகளையும் தனது செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram