உலக செய்திகள்

பாகிஸ்தானில் இம்ரான்கான் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

பாகிஸ்தானில் இம்ரான்கான் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அரசு எதிர்ப்பு இயக்கத்துக்கு தனது கட்சி தொண்டர்களை தயார்படுத்துவதற்காக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் பேரணிகளை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக அங்கு சென்றார். பொதுமக்களை நேரில் சந்தித்து நிதியுதவி அளித்துவிட்டு இம்ரான்கான் ஹெலிகாப்டரில் இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டார். அந்த ஹெலிகாப்டர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடியாலா என்கிற கிராமத்துக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதை அறிந்த விமானி ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்கினால் விபத்துக்குள்ளாக நேரிடும் என்பதை உணர்ந்து அங்குள்ள திறந்தவெளி மைதானத்தில் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இம்ரான்கான் உயிர் தப்பினார்.

ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய இம்ரான்கான் அங்கு நின்றுகொண்டிருந்த கிராம மக்களுடன் கலந்துரையாடினார். இளைஞர்கள் அவருடன் 'செல்பி' புகைப்படம் எடுத்து கொண்டனர். அதன்பின்னர் இம்ரான்கான் காரில் இஸ்லாமாபாத் சென்றடைந்தார்.

முன்னதாக கடந்த மாதம் 10-ந்தேதி கூட்டம் ஒன்றில் பங்கேற்க இஸ்லாமாபாத்தில் இருந்து குஜ்ரன்வாலாவுக்கு சிறப்பு விமானத்தில் இம்ரான்கான் சென்றபோது, நடுவானில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.