உலக செய்திகள்

டிரம்பிற்கு பலத்தை கொடுங்கள்... வெள்ளை மாளிகையில் கடவுளிடம் பிரார்த்தனை செய்த மதபோதகர்கள்

50 சதவீதத்திற்கு அதிகமான அமெரிக்கர்கள் ஈரான் - அமெரிக்க போரையும் டிரம்ப்பின் இந்த முடிவையும் எதிர்த்து வருகின்றனர்.

வாஷிங்டன்,

ஈரானுடன் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், ​​அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது அலுவலகத்தில் ஒரு கிறிஸ்தவ பிரார்த்தனையை நிகழ்த்தியுள்ளார். இந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் பகிரங்கமாக பிரார்த்தனை செய்வது இதுவே முதல் முறை ஆகும்.

நாட்டின் பாதுகாப்பிற்காக டிரம்ப் இந்த பிரார்த்தனையைச் செய்துள்ளார். டிரம்பின் வெள்ளை மாளிகை உதவியாளர் டான் ஸ்காவினோ, இந்த வீடியோவைப் பகிர்ந்துகொண்டு, கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிப்பாராக என்று எழுதியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அனைத்து கிறிஸ்தவ மத போதகர்களையும் வெள்ளை மாளிகைக்கு அழைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டார். டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் தனது இருக்கையில் அமர்ந்தார். பின்னர் பிரார்த்தனை நடைபெற்றது.

டிரம்பின் பிரார்த்தனையின் போது ஒரு போதகர், "நீங்கள் அவர் மீது உங்கள் கிருபையையும், பாதுகாப்பையும் தொடர்ந்து பொழிய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். எங்கள் வீரர்கள், எங்கள் ஆயுதப் படைகளில் பணியாற்றும் அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் மீதும் உங்கள் கிருபையையும் பாதுகாப்பையும் தொடர்ந்து பொழிய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். தந்தையே, எங்கள் ஜனாதிபதிக்கு எங்கள் தேசத்தை வழிநடத்தத் தேவையான பலத்தை நீங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்" என்று கூறுகிறார்.

2021 ஆம் ஆண்டில், அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்தது. அப்போதிருந்து, அமெரிக்கா நேரடியாக போர்க்களத்தில் நுழையவில்லை. இப்போது, ​​2026-ல், ஈரானுடனான போர் தொடங்கியது. அமெரிக்கா இந்தப் போரில் ஈடுபட்டு வருகிறது.

இதுவரை, ஈரான் போரில் 6 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சியோஸ் கணக்கெடுப்பின்படி, 50 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் இந்தப்போரையும், டிரம்பின் இந்த முடிவையும்எ எதிர்த்து வருகின்றனர்.