கோப்புப்படம் 
உலக செய்திகள்

பெஷாவர் தாக்குதல் முக்கிய குற்றவாளி சுட்டுக்கொலை: பாகிஸ்தான் ராணுவம் அதிரடி

57 பேரை பலி கொண்ட பெஷாவர் தாக்குதலின் முக்கிய குற்றவாளி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெஷாவர்,

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த மார்ச் 4-ந்தேதி தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். இதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 57 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இது சமீபத்திய ஆண்டுகளில் பாகிஸ்தானில் நடத்தப்பட்ட மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக பார்க்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த நிலையில் பெஷாவர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹாசன் ஷா என்கிற பயங்கரவாதி கைபர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது.

இறுதியில் ஹாசன் ஷா மற்றும் அவரது கூட்டாளி ஒருவர் என 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை ராணுவ வீரர்கள் கைப்பற்றினர்.