ஸ்டாக்ஹோம்,
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நார்டிக் நாடுகள் என அழைக்கப்படும் டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் இந்தியா பங்கேற்கும் உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது.
சுவீடன் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும், நார்டிக் நாடுகளின் பிரதமர்களும் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் சுவீடன் சென்றடைந்தார். மோடியுடன் இந்திய உயர்மட்ட பிரதிநிதிகள் குழு ஒன்றும் சென்றது. சுவீடன் வந்தடைந்த மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வென் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தார். பின்னர் இருவரும் ஒரே காரில் விமானநிலையத்திலிருந்து மோடி தங்கவிருக்கும் விடுதிக்கு சென்றனர்.
10 மணி நேரத்தில் 10 நிகழ்ச்சிகள். சுவீடன் நாட்டு மன்னர் மற்றும் சுவீடன் பிரதமருடன் பேச்சுவார்த்தை, நார்டிக் மாநாடு, சுவீடன் நாட்டு தொழில் அதிபர்களுடன் வட்ட மேசை மாநாடு, இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடல் என இன்றைய நாள் மிகவும் பரபரப்பான நாள் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் பிரதமரின் சுவீடன் பயணம் குறித்து டுவிட்டர் செய்துள்ளார்.
இந்நிலையில் சுவீடன் நாட்டு மன்னர் கார்ல் கஸ்டாப்பை பிரதமர் மோடி சந்தித்தார். பல துறைகளில் இரு நாட்டு உறவுகளை பலப்படுத்துவதை குறித்து இருவரும் கலந்துரையாடியதாக ரவீஷ் குமார் தெரிவித்தார்.
மேலும் இங்கிலாந்து செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாடவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.