உலக செய்திகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் புறப்பட்டார் பிரதமர் மோடி

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு முடிவடைந்த நிலையில், பிரதமர் மோடி தாயகம் புறப்பட்டார். PMModi

ஜீங்,

சீனா, இந்தியா, ரஷியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகளை உறுப்பு நாடுகளாக கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, சீனாவுக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டார். 6 வாரங்களில் அவர் சீனாவுக்கு சென்று இருப்பது இது 2-வது முறை ஆகும். மாநாட்டின் இடையே பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின் பிங்கை சந்தித்தார்.

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கிடம், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வலுவான, உறுதியான உறவுகள் நிலையான மற்றும் அமைதியான உலகத்தை ஊக்குவிக்கும் என்று கூறினார்.

வூகனில் நடந்த முறைசாரா உச்சிமாநாட்டின்போது பேசப்பட்ட விஷயங்களை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளை அமல்படுத்தி வரும் நிலவரம் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

மேலும் இருதரப்பு உறவை வலுப்படுத்த வேண்டியதின் அவசியம் குறித்தும் அவர் ஜின்பிங்கிடம் விளக்கினார்.

இந்தியா மற்றும் சீனா இடையேயான ஒட்டுமொத்த இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதுடன், வர்த்தகம், முதலீடு துறைகளில் உறவை ஆழப்படுத்தும் சாத்தியக்கூறுகள் பற்றியும் இரு தலைவர்களும் ஆராய்ந்தனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, கடந்த ஏப்ரல் மாதம் சீனாவின் வூகன் நகரில் சாதாரண முறையில் சந்தித்து பேசியது போல், மீண்டும் சந்தித்து பேசுவதற்காக அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வருமாறு ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஜின்பிங் ஏற்றுக்கொண்டார்.

அதனைதொடர்ந்து ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதம மோடி, குடிமக்களுக்கு பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, மண்டல தொடர்பு, ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் இறையாண்மை ஆகியவற்றின் மீது மரியாதை மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை குறிக்கும் வகையிலான செக்யூர் (SECURE) என்ற கொள்கையை முன்வைத்து பேசினார். இதனையடுத்து ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு வெற்றியடைய முழு அளவில் இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் எனக்கூறினார்.

இந்நிலையில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு முடிவடைந்த நிலையில், சீனாவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி தாயகம் புறப்பட்டார்.