உலக செய்திகள்

பிரதமர் மோடி 2 நாள் இஸ்ரேல் பயணம்; உறுதிப்படுத்திய நெதன்யாகு

இஸ்ரேலுக்கு பயணித்த முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

ஜெருசலேம்,

பிரதமர் மோடி வருகிற 25 மற்றும் 26 ஆகிய இரு நாட்கள் இஸ்ரேலில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தி உள்ளார்.

அமெரிக்க யூத பேரமைப்புகளின் தலைவர்களுக்கான மாநாடு நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய நெதன்யாகு, இரு நாடுகளுக்கும் இடையே மிக பெரிய அளவில் நட்புறவு உள்ளது. அனைத்து வித ஒத்துழைப்பை பற்றியும் நாங்கள் ஆலோசிக்க இருக்கிறோம் என்றார்.

தொடர்ந்து அவர், இந்தியா சிறியதொரு நாடு அல்ல. 140 கோடி மக்கள் உள்ளனர். அது மிக பெரிய, சக்தி வாய்ந்த, அதிக பிரபலம் வாய்ந்த நாடு என்று அப்போது குறிப்பிட்டார்.

இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, நெசட் என பெயர் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 நாள் பயணத்தில், இருதரப்பு உறவுகள் மற்றும் மண்டல நலன்கள் பற்றி பேச உள்ளார். இது, இஸ்ரேலுக்கான அவருடைய 2-வது பயணம் ஆகும்.

2017-ம் ஆண்டு ஜூலையில் இஸ்ரேலுக்கான அவருடைய முதல் பயணம் அமைந்திருந்தது. இஸ்ரேலுக்கு பயணித்த முதல் பிரதமர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு இரு தரப்பிலும் மந்திரிகள் மட்டத்திலான பரஸ்பர பயணம் மேற்கொள்ளப்பட்டு, அதன் உதவியுடன் இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இதேபோன்று, பாதுகாப்பு, தொழில் நுட்பம் மற்றும் தொழிற்சாலை என பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தும் வகையில் இந்தியாவுடன் பாதுகாப்பு அமைச்சக அளவில் டெல் அவிவ் நகரில் கடந்த நவம்பரில், இஸ்ரேலின் கூட்டு பணிக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

அதனுடன், இரு நாடுகள் இடையே பாதுகாப்பு, தொழிற்சாலை மற்றும் தொழில் நுட்பம் தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்த அதே நவம்பரில், ஒப்பந்தம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது.