கிகாளி,
பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா, உகாண்டா, தென்ஆப்பிரிக்கா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக நேற்று பிற்பகல் புறப்பட்டு சென்றார். 5 நாட்கள் சுற்றுப்பயணத்தின் முதல் பயணமாக ருவாண்டா நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றார்.
கடந்த 20 ஆண்டுகளில் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ருவாண்டாவுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். அவருக்கு அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடியை ருவாண்டோ நாட்டின் அதிபர் பால் ககமே விமான நிலையத்தில் வரவேற்றார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று 2வது நாளாக அந்நாட்டின் இனப்படுகொலை நினைவக மையத்திற்கு சென்றார்.
இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பு நிர்வாகி ரவீஷ் குமார் வெளியிட்டுள்ள செய்தியில், ருவாண்டா நாட்டின் கிகாளி பகுதியில் அமைந்த இனப்படுகொலை நினைவு மையத்திற்கு பிரதமர் மோடி இன்று சென்றுள்ளார். வன்முறையில் மிக மோசம் நிறைந்த வகையில் பலியானவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த நினைவகம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்த நினைவகம் ருவாண்டா நாட்டில் துட்சி என்ற முதன்மை பழங்குடி சமூகத்தினை சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக அமைந்துள்ளது.