உலக செய்திகள்

மனைவியை சுட்டு கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட பாகிஸ்தான் மந்திரி

மனைவியை சுட்டு கொலை செய்து விட்டு தானும் அதே துப்பாக்கியால் சுட்டு பாகிஸ்தான் மந்திரி தற்கொலை செய்து கொண்டார். #Pakistan #Tamilnews

இஸ்லாமாபாத்

பாகிஸ்தானின் சிந்து மாகாண மந்திரி, மனைவியை சுட்டுக்கொன்று விட்டு, தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் திட்டம் மற்றும் அபிவிருத்தி மந்திரியாக இருந்தவர் மிர் கஜார்கான் பிஜரானி. இவரது மனைவி பரீஹா ரசாக் ஹாரூன் இவர்கள் கராச்சி நகரில் வசித்து வந்தனர். பரீஹா பிஜரானியின் இரண்டாவது மனைவி ஆவார்

இந்த நிலையில் நேற்று மதியம் மந்திரி பிஜரானி பங்களா அறையில் உள்ள சோபாவில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது மனைவி அருகில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார்.

இது குறித்து போலீசுக்கு தகவல் கிடைத்தது போலீசார் விரைந்து சென்றனர் . அவர்கள் மந்திரி பிஜரானியின் உடலையும், மனைவி பரீஹாவின் உடலையும் ஜின்னா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மந்திரி பிஜரானியின் தலையில் ஒரு குண்டு பாய்ந்திருந்ததும், மனைவி பரீஹாவின் அடிவயிற்றில் 2 குண்டுகளும், தலையில் ஒரு குண்டும் பாய்ந்திருந்ததும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்து உள்ளது.

மந்திரி பிஜரானி முதலில் மனைவியை சுட்டுக்கொன்று விட்டு, அதன்பின்னர் அதே துப்பாக்கியால் தானும் சுட்டுக்கொண்டு உயிரிழந்து உள்ளார் என கூறப்படுகிறது

சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

மந்திரி பிஜரானியின் பங்களாவில் வேலை பார்த்து வந்த 6 பேரை அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர் . கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்தாலும், அதன் அடிப்படை காரணம் என்ன என்பது தெரியவில்லை.