கொழும்பு,
இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி பிரதமர் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். அன்று முதல் இலங்கையில் அரசியல் நெருக்கடி உருவானது. பின்னர் சிறிசேனா, சுமார் 20 மாதங்கள் முன்னதாகவே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, உடனே தேர்தல் நடத்த உத்தரவிட்டார்.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அதிபரின் முடிவை ஏற்கமறுத்து, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைத்தது. விக்ரமசிங்கே, ராஜபக்சே இருவரும் தாங்கள் தான் பிரதமர் என்று அறிவித்தனர். விக்ரமசிங்கே தன்னை நீக்கியது செல்லாது, தனக்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்று கூறிவந்தார்.
சபாநாயகர் கரு ஜெயசூரியா, ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவரை சட்டப்படி பிரதமராக இந்த அவை ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்தார். விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய முன்னணி ராஜபக்சே மீது 3 நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவந்தது. ஆனாலும் ராஜபக்சே பதவி விலக மறுத்துவிட்டார்.
இதனால், இலங்கையில் அரசியல் குழப்பம் உச்சம் அடைந்துள்ளது. இந்த நிலையில், வரும் 5 ஆம் தேதி அந்நாட்டு பாராளுமன்றம் மீண்டும் கூட உள்ளது. அப்போது ராஜபக்சவுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து, பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பினருக்கு பிரதமர் பதவியை வழங்க தயார் என்று சிறிசேனா தெரிவித்து இருப்பதாக இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.