கோலாலம்பூர்,
பிரதமர் மோடி மலேசியா நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் இன்று மலேசியாவுக்கு செல்ல இருக்கிறார். மலேசியாவுக்கு 3-வது முறையாக அவர் மேற்கொள்ளும் பயணம் இதுவாகும்.
இந்த பயணத்தின்போது, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமை நேரில் சந்தித்து அவருடன் ஆலோசனைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று, இந்திய சமூகத்தினர் மற்றும் தொழில், வணிக பிரதிநிதிகளுடனும் அவர் உரையாடுவார்.
பிரதமர் மோடியின் மலேசிய பயணத்தின்போது, 10வது இந்தியா-மலேசியா தலைமை செயல் அதிகாரிக்கான கூட்டமும் நடைபெற உள்ளது. இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி மறுஆய்வு மேற்கொள்வார்கள்.
பிரதமர் மோடியின் மலேசிய பயணத்தில் புதிய சாதனை படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, இந்திய வம்சாவளியை சேர்ந்த 800 கலைஞர்கள் ஒரே மேடையில் ஒன்றாக 5 நிமிடங்கள் நடனம் ஆடி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க முடிவு செய்துள்ளனர்.
பிரதமர் மோடி மற்றும் மலேசிய பிரதமர் முன்னிலையில் இன்று மாலை இந்த சாதனை படைக்கப்படும். அந்நிய மண்ணில் இந்திய பாரம்பரியத்தின் பாதுகாப்பை வெளிப்படுத்தும் நோக்கிலும் பாரம்பரிய மற்றும் நவீன வம்சாவளியினருக்கு பாலம் ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த நடனம் இருக்கும்.