மாஸ்கோ,
ரஷிய அதிபராக இருக்கும் புதின் கடந்த 1999 ஆம் ஆண்டில் இருந்து ரஷியாவின் பிரதமராகவும், அதிபராகவும் அதிகார பொறுப்பில் உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு புதின், தான் அதிபர் பதவியில் தொடர்ந்து 2036 ஆம் ஆண்டு வரை இருக்கலாம் என்ற வகையில் அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்தார்.
இதற்கிடையில் நீண்ட காலமாக அதிகாரத்தில் இருக்கும் புதின் ஆட்சியில் ஊழல் மிக ஆழமாக வேரூன்றி இருக்கிறது என ரஷிய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி குற்றம் சாட்டி வந்தார். அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களையும் அவர் நடத்தி வந்தார்.
இதற்கிடையில் அலெக்சி நவால்னியின் அமைப்பு தீவிரவாத அமைப்பாக ரஷிய அரசால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொடிய விஷ தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அலெக்சி நவால்னி, ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பிய போது ரஷிய காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ரஷியாவில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து அவ்வபோது தனது வழக்கறிஞர் வாயிலாக எதிர்ப்பை பதிவு செய்து வரும் அவர், தற்போது உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்திருப்பதை கடுமையாக எதிர்த்துள்ளார். மேலும் புதின் ஆட்சியின் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்கவே உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.