அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி உள்பட ஈரானை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளான பஹ்ரைன், ஜோர்டான், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டது. எண்ணெய் கப்பல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. விமான சேவையும் மத்திய கிழக்கு பகுதியில் முடங்கி உள்ளது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஈரான் உச்ச தலைவர் காமேனி மரணத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது லெபனான் தாக்குதல் தொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும் 149 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக வான்வழி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.லெபனான் மீது இன்னும் தீவிரமான தாக்குதலை முன்னெடுக்க போகிறோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்க தயாராக உள்ளதாக தெரிவித்து இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. நட்பு நாடுகளின் நலன்களை பாதுகாக்க ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவப் பயன்படும் தளங்களை அழிக்க தற்காப்புத் தாக்குதல்களை நடத்த தயார் என அந்நாடுகள் அறிவித்துள்ளது.