உலக செய்திகள்

சிங்களர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்தா? ஆய்வறிக்கை தகவல் வெளியாகியது

இலங்கையில் சிங்களர்களின் இனவிருத்தியை சிதைக்கும் வகையில் உணவுப்பொருட்களில் மருந்து கலக்கப்படுகிறது என குற்றம்சாட்டப்பட்டது.

கொழும்பு,

இலங்கையின் கிழக்குப்பகுதியில் கடந்த வாரம் இஸ்லாமிய சமையல்காரர், தன்னுடைய கடையில் சிங்களர்களுக்கு கருத்தடை பொருட்கள் அடங்கிய உணவுப்பொருட்களை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து இஸ்லாமியர்களின் வணிக மையங்கள் மற்றும் மசூதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அம்பாறையில் நடந்த மோதல் சம்பவத்தில் 5 பேர் காயம் அடைந்ததாகவும், பொருட்சேதம் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியது. இதனையடுத்து அங்கு அமைதியை ஸ்திரப்படுத்தும் வகையில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர். வழிபாட்டு தளங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதனையடுத்து கடையில் இருந்து போலீசார் உணவுப்பொருட்களை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இப்போது பரிசோதனை முடிவானது வெளியாகி உள்ளது.

அதில் அம்பாறையில் பரோட்டாவிற்குள் கருத்தடையை ஏற்படுத்தும் மாத்திரை எதுவும் இருக்கவில்லை என்றும், அதுஒரு மாவுக்கட்டி மட்டும்தான் என ஆய்வறிக்கையில் தெரியவந்து உள்ளது. இலங்கை ஆய்வகத்தின் பகுப்பாய்வாளர் ஏ.வெலியங்கே, பரோட்டாவில் எந்தவித மருந்தும் கலந்திருக்கவில்லை, அதில் மாவு துகள் ஒன்று கட்டியாக இருந்தது என்று தெரிவித்து உள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என உள்ளூர் மீடியாக்கள் செய்தி வெளியிட்டு உள்ளது. உணவுப்பொருட்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் எந்தஒரு மருந்து வகைகளும் காணப்படவில்லை என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.