உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இரட்டை வெடி குண்டு தாக்குதல்: 14 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இரட்டை வெடி குண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 14- பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானின் சுற்றுலா நகரங்களில் ஒன்றான பாமியன் நகரில் சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வெடி குண்டுகள் வெடித்துச் சிதறின. இந்த குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஒரு போக்குவரத்து காவலரும் அடங்குவர். 45- பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி வரும் தலீபான் பயங்கரவாத அமைப்பு, தங்கள் அமைப்பினருக்கும் தற்போதைய தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.

கத்தார் தலைநகர் தோகாவில் தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT