உலக செய்திகள்

ரஷியா: பல்கலைக்கழகத்தில் கத்திக்குத்து தாக்குதல் - 4 இந்திய மாணவர்கள் காயம்

தாக்குதல் நடத்திய சிறுவனை மடக்கிப் பிடித்தபோது 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.

மாஸ்கோ,

ரஷியாவின் பர்கோஷ்தான் குடியரசில் உள்ள உபா பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவ பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் சிறுவன் ஒருவன் கத்தியுடன் புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கினான்.

இந்த கத்திக்குத்து தாக்குதலில் 4 இந்திய மாணவர்கள் உள்பட பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதல் நடத்திய சிறுவனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதில் 2 காவலர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சிறுவனிடம் ரஷிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.