உலக செய்திகள்

உக்ரைன் மீது 430 டிரோன்கள், 68 ஏவுகணைகளை வீசி ரஷியா கடுமையான தாக்குதல்: கட்டிடங்கள் தகர்ப்பு; 4 பேர் பலி

ரஷியாவின் வான்வழி தாக்குதல்களில் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு விட்டது என தகவல் தெரிவிக்கின்றது.

கீவ்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 4 வருடங்களை கடந்து விட்டன. அமெரிக்கா தலைமையிலான மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத சூழலில், போரானது முடிவுக்கு வராமல் உள்ளது.

இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களை இலக்காக கொண்டு 430 டிரோன்கள் மற்றும் 68 ஏவுகணைகளை வீசி, ரஷியா நேற்றிரவு கடுமையான தாக்குதலில் ஈடுபட்டது. இதில் சுமி, கார்கிவ், நிப்ரோ மற்றும் மிகோலைவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன.

இதுபற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, நூற்றுக்கணக்கான டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கொண்டு ரஷியா கடுமையான தாக்குதலை நடத்தியது. அதனை உக்ரைன் வான் பாதுகாப்பு சாதனங்கள் இடைமறித்து அழித்தன. இதனால், பேரழிவு ஏற்படாமல் தடுத்தன என கூறினார்.

மத்திய கிழக்கில் நடக்கும் போரை பயன்படுத்தி, உக்ரைன் மற்றும் ஐரோப்பாவில் பெரியதொரு அழிவை ஏற்படுத்துவதற்கு ரஷியா முயற்சிக்கிறது என்றும் அவர் கூறினார்.

இந்த தாக்குதலில், 4 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் கீவ் நகரை சேர்ந்தவர்கள். இதுதவிர 15 பேர் காயமடைந்தனர். கீவ் நகரின் 4 மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்து உள்ளன. இதேபோன்று வான்வழி தாக்குதல்களில் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு விட்டது என தகவல் தெரிவிக்கின்றது.